Monday, March 29, 2004

வனிதா


Oscar விருது பெற்ற தமிழ் பெண்

மனித மாமிசத்தை சாப்பிடும் பயங்கரமான ராட்சஸன். பச்சை நிரத்தில், மலையைப் போன்ற உடம்புடன்... பார்கையில் மனிதன் போலவே கோப தாபங்களுடன் சுற்றிக் கொண்டிருப்பார். தன்னுடைய சின்னஞ்சிறிய காட்டில் அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருந்தான். ஆனால் அந்த ராட்சஸனுக்கு பூணை, எலித் தொல்லை அதிகமானது. அந்த எலித் தொல்லையிலிரந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஒரு கோட்டையை எழுப்ப வேண்டும். அந்த வேலையை தொடங்கும்போது, அடுக்கடுக்காய் பல பொறுப்புகள் வந்து தலையில் விழுந்தன. கடைசியில் ஒரு ராஜகுமாரியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் வந்த விட்டது.

பார்ப்பதற்கு ராட்சஸன் ஆனாலும், அவனுடைய மனம் இளகியதென்று காட்டிய படம்தான் அன்மையில் யானிமேஷன் பிரிவில் ‘ஆஸ்கர்’ விருதைப் பெற்ற ‘‘ஷ்ரெக்’’. உலகளவில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. யானிமேஷன் துறையில் புதிய தொழில் நுட்பங்களுடன் புதிய சாதனைகளை படைத்த ‘ஷ்ரெக்’ படத்தின் வெற்றியில் ஒரு தமிழ் பெண்ணுக்கு பங்குண்டு என்பதை பலருக்கு தெரியாது. அந்த ‘ஆஸ்கர்’ தமிழ் பெண்தான் வனிதா ரங்கராஜன்.

தமிழ்நாடு திருச்சியில் பிறந்த வனிதா, திருச்சி ரீஜினல் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஆர்க்கிடெக்சர் படித்தார். அப்புறம் வேலைத் தேடி பெங்களூர் போனவருக்கு ரமணன் அறிமுகம் கிடைத்தது. அதுவே காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. ரமணனும் ஒரு இன்ஜினீயர்தான். ஆர்கிடெக்சரை படித்த வனிதா 95ல் ஒருநாள் தற்செயலாக `Toy Story’ படத்தை தயாரித்த விதத்தை தொலைக்-காட்சியில் பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்ச்சி வனிதாவின் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது. அவர் அர்கிடெக்சரை மறந்து முழு நேரம் யானிமேஷன் கற்றுக் கொள்ள தொடங்கினார்.

இதற்கிடையில் கணவர் ரமணன் மேற்படிப்பிற்காக அமெரிக்க செல்ல வேண்டிய சந்தர்ப்பம் வந்ததால், வனிதா, அந்த வாய்ப்பை தனக்கும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். அங்கு ‘‘இன்டஸ்ட்ரியல் லைட் மேஜிக்’’கில் விஜூவல் எஃபெக்ட்ஸ் படிப்பை முடித்தார். உடனே அவருக்கு பசிபிக் டேட்டா இமேஜெஸில் வேலை கிடைத்தது. அப்புறம் ‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’

‘‘ட்ரீம் வொர்க்ஸ்’’ கம்பெனியில், திரையில் தோன்றும் ஒவ்வொரு ப்ரேமிற்க்கும் ஒளியைக் கொடுப்பது வனிதாவின் வேலை. எந்த மாதிரி ஒளி எந்த உணர்ச்சியை உண்டாக்கும். எங்கு ஒளி இருந்தால் காட்சி நன்றாக அமையும். முகத்தில் ஒளியை எப்படி பிரதிபலிக்கச் செய்யலாம். நிழல்கள் எப்படி இருக்கவேண்டுமென்பவை’’ லைட்டிங் டெக்னிகல் டைரெக்-டரி’’ன் கடைமைகள். ப்ரேமில் தோன்ற கூடிய இரவு, பகல், தூசு, காற்று, அக்னி... இப்படி எல்லாமே ஒரு சவால்தான். ஆனால் இரவு பகல் பார்க்காமல் கம்ப்யூட்டர்களுடன் மல்யுத்தம் செய்து, தன்னிடம் ஒப்படைத்த பணியை செவ்வனே முடித்தார் வனிதா. இதற்கு தொழில் நுட்பம் மட்டும் போதாது. கலை உணர்ச்சி, இருக்க வேண்டும். வனிதாவிடம் அது நிறையவே இருக்கிறது. ‘ஷ்ரெக்’ படம் ஒரு யானிமேஷன் படமாக மட்டுமின்றி தொழில் நுட்பத்தில ரிக்கார்ட்களை பதிவு செய்தது. இந்த படத்தில் வழக்காம கையில் வளரவதை விட்டுட்டு முழுதும் கம்ப்யூட்டரின் உதவியால்தான் வரைந்தனர். 300 செயற்கை சதைகளுடன் ‘ஷ்ரெக்’ முகத்தில், தமக்கு வேண்டிய உணர்ச்சியை பிரதிபலிக்க செய்தது ஒரு சாதனை. இப்படத்தில் தோன்றும் செடி, கொடி, மரங்களில் ஒவ்வொரு இலையும் அசையும். தூசு பறக்கும். ‘ஷ்ரெக்’ படத்தை பார்த்தவர்கள் ‘‘அந்த படத்தில் ஒவ்வொரு காட்சியில் நாங்கள் இருக்கின்ற மாதிரி பாவித்தோம்’’ என்று புகழாரம் சூட்டினாரென்றால் வனிதாவின் குழு செய்த அற்புதத்தை உணரமுடிகிறது.

லாஸ் ஏன்ஜெல்ஸில் ‘ஆஸ்கர்’ விருது விழா நடந்துக் கொண்டிருக்கும்போது, வனிதா தன்னுடைய சக ஊழியர்களுடன் காலிபோர்னியா பாலோ ஆல்டோ ஸ்போர்ட்ஸ் களப்பில் அவ்விழாவின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். தங்களுடைய படத்துக்கு விருது கிடைக்குமோ... கிடைக்காதோ என்ற பயம். கடைசியில் பட தயாரிப்பாளர் யாரன் வார்னர் மேடையை ஏறி விருது பெற்றுக்கொள்ளும்போது வனிதா-வின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு இந்திய பெண்ணாக தானும் ஆஸ்கர் விருது பெற்ற குழுவில் இருப்பது தனக்கு கிடைத்த பாக்கியமாக அவர் பெருமைப்-பட்டார். திருச்சியிலுள்ள வனிதாவின் பெற்றோருக்கு அளவிலா மகிழ்ச்சி. அவர்கள் தம்முடைய நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடினார்கள்.

‘‘6 வருடங்களுக்கு முன் இந்தியா-வில் இருந்து தொலை காட்சியில் ஆஸ்கர் விருது விழாவை பார்த்த நான், இன்று எங்க ஸ்டூடியோவில் ஆஸ்கர் விருதை கையில் பிடித்து நின்றதை பற்றி யோசிக்கும் போது... அற்புதமாக இருக்கிறது’’ என்று சொல்லும் வனிதா, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், இதுவரை ‘க்ரீன் கார்ட்’ வாங்க-வில்லை. ஏன் என்று கேட்டால் ‘‘என்றென்றுக்கும் நான் திருச்சிக்காரி’’ என்று சொல்கிறார்.

தற்போது வனிதா ‘ஷ்ரெக் 2’ வேலைகளில் மும்முரமாக இருக்-கிறார். அந்தப் படம் இவ்-வருடம் ஜூலை மாதம் வெளிவரப் போகிறதாம்’ அப்போ 2005_லும் வனிதாவுக்கு மற்றொரு ஆஸ்கார் காத்துக் கொண்டிருக்கிறது.

nantri - kumutham

Sunday, March 21, 2004

பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி

இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்!


அந்த ஆறு வயதுக் குழந்தை மாடியின் மேல் விளையாடிக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் அவளின் கை மின் கம்பத்தின் வயர்களின் மேல் பட்டது. கணத்தில் ஒரு கை, இரண்டு கால்கள் எரிந்து கறுகிப் போயின. பெற்றோர் அவளை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும் பலன் இல்லாமல் போனது. இரண்டு கால், ஒரு கையைப் பறிகொடுத்து வீடு திரும்பிய அவளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கை ஊற்றி வளர்க்கத் தொடங்கினார்கள். அதனால்தான் உடல் ஊனமுற்றாலும் வைராக்யம் கொண்ட மனதுடன் வாழ்க்கையில் பல வெற்றிகளைக் குவிக்கிறார் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சார்ந்த இருபத்து இரண்டு வயதுள்ள துடிப்புமிக்கப் பெண் பத்மாவதி நாக கனக ஸ்ரீவல்லி.

ஆம். அன்றைய ஆறு வயதுக் குழந்தை, தற்போது ஒரு கையினால் கம்ப்யூட்டரில் கீபோர்டில் மடமடவென்று டைப் செய்வாள். கால்கள் இல்லையென்றாலும் செயற்கை உறுப்புகளை அமர்த்தி பள்ளிக்கு அனுப்பினார் பத்மாவதியின் தந்தை மல்லிகார்ஜுன ராவ். “இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். இருக்கிறதை வைத்து எப்படிச் சிறப்பாகச் செயல்பட முடியுமென்பது பற்றி யோசி” என்று எங்க அப்பா அடிக்கடிச் சொல்வாரென்று சொல்லும் பத்மாவதி, தந்தையின் சொல்லே வேத வாக்காக செயல்பட்டு பட்டப்படிப்பை முடித்தார். அப்புறம் தன்னுடைய தோழிகளில் பல பேர் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டிருக்க தானும் கற்றுக்கொள்ள முயன்றார் பத்மாவதி. இதைப் பார்த்து சில பேர் கேலி செய்ததுண்டு. ஆனால் சாஃப்ட்வேர் லாங்வேஜ்ஜைக் கற்றுக்கொண்ட பத்மாவதி, ஹார்ட்வேரையும் கற்றுக்கொள்கிறார்.

இதற்கிடையில் பத்மாவதி ஹோம் கார்ட் வேலைக்கு விண்ணப்பித்தார். எல்லாத் தகுதிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் அவருக்கு வேலை கிடைத்தது. தற்போது பத்மாவதி விஜயவாடா போலீஸ் கண்ட்ரோல் ரூமில் டிராபிக் பிரிவு கம்ப்யூட்டர் செக்ஷனில் வேலை பார்க்கிறார். படு சுறுசுறுப்பாக இருக்கும் பத்மாவதியைப் பார்த்து சக ஊழியர்கள் “தன்னம்பிக்கையின் முழு உருவம்தான் பத்மாவதி” என்று புகழ்கிறார்கள். விடைபெறும்போது “என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டதற்கு “எங்கப்பா சொன்னதுதான். இழந்ததைப் பற்றிக் கவலை வேண்டாம். நடக்கிறதைப் பார்” என்று சொன்னார் பத்மாவதி.

- மூர்த்தி -
Quelle - Kumudham

Sunday, March 07, 2004

நசீம் பானு!


பாரதம் தந்த புதுமைப் பெண்!

ஒரு தாயின் கண் முன்னாலேயே அவளது வயது வந்த 13 வயது மகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டால் எப்படியிருக்கும்? மகளது மானத்தைக் காப்பாற்ற முனைந்த அவளது அன்புக் கணவனைக் கண் முன்னாலேயே படுகொலை செய்ததோடு மட்டுமல்ல அவளது மாமா, மாமி என அவளது உறவினர்கள் 24 பேரைப் படுகொலை செய்து ஆற்றினுள் வீசினால் எப்படியிருக்கும்? உங்களில் பலருக்கு 1983இல் நடைபெற்ற இலங்கை இனக்கலவரத்தின் நினைவு உடனடியாக ஞாபகத்தில் வரும். இது போன்ற பல நிகழ்வுகள் அக்கலவரத்தில் நடைபெற்று இலங்கை அரசியல் வரலாற்றினையே அடியோடு மாற்றி வைத்து விட்டன. ஆனால் அது போன்ற பயங்கர நிகழ்வுகளை இந்தத் தாய் இரு வருடங்களுக்கு முன்னர் கோத்ராவில் முஸ்லீம் வெறியர்களால் இந்துக்கள் பயணித்த புகையிரதம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் இந்து வெறியர்களால் அப்பாவி முஸ்லீம் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட இனக்கலவரத்தில் அனுபவித்திருக்கின்றாள். இன்று இவளுக்குகென்றிருக்கும் உறவுகள் இவளது 13 வயது மகனும், மைத்துனியொருத்தியுமே. இந்தப் படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுது இவள் ஆஸ்பத்திரியிலிருந்ததால் உயிர் தப்பித்துக் கொண்டாள். ஆனால் ஆஸ்பத்திரியிலிருந்த இவளைப் பார்ப்பதற்காக வந்த இவளது உறவினர்களில் மைத்துனியொருத்தியைத் தவிர அனைவரும் இந்து வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த அப்பாவியான மைத்துனியோ பலரால் பலர் முன்னிலையில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, ஆற்றில் தூக்கி வீசப்பட்டாள். இன்று அவள் பிழைத்திருந்தாலும் நடைப்பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். இவ்வளவும் நடந்து முடிந்திருக்கின்றது குஹராத்தைச் சேர்ந்த நசீம் பானுவின் வாழ்வில்.

இவ்வளவு நடந்தும் நசீம்பானு தன் துணிவினை இழந்துவிடவில்லை. இன்று அவள் நடந்து முடிந்த கொடும் செயல்களுக்காக நீதி வேண்டித் தனது போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றாள். இந்தப் படுகொலைகளுக்குக் காரணமான சமூக விரோதிகளைச் சட்டம் தண்டிக்கும் வரையில் இவளது போராட்டம் ஓய்ந்து விடப்போவதில்லை. படுகொலைகளுக்குக் காரணமானவர்கள் வெளியில் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும் பொழுது அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதால் எந்தவிதப் பயனுமில்லை. சட்டத்தின் தண்டிப்புக்குப் பின்னால் மட்டுமே அரசின் வருத்தத்துக்கு அர்த்தமிருக்க முடியும் எனக் கூறும் நசீம் பானு இன்று பாரதத்தின் நீதிமன்றத்தில் நம்பிக்கை வைத்து நீதியினை நாடி வழக்குத் தொடர்ந்திருக்கின்றாள். இவள் தனது வழக்கினை வாபஸ் பெறாவிட்டால் இவளது மகனைக் கடத்தப் போவதாகச் சமூகவிரோதிகள் மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நசீம் பானு தன் உறுதியினை இழந்து விடவில்லை. அவளால் இழப்பதற்கு இனியென்ன இருக்க முடியும்? தனக்கு நீதி கிடைக்குக் வரையில் தான் ஓய்ந்து விடப்போவதில்லை என்று வைராக்கியத்துடன் இருக்கும் நசீம் பானு கடந்த இரு வருடங்களாக பெண்களுக்காகப் பாடுபடும் அரசு சார்பற்ற , இலாப நோக்கற்று இயங்கும் ஸ்தாபனமொன்றில் இணைந்து பாதிக்கப் பட்ட பெண்களின் உரிமைக் குரலாக விளங்கி வருகின்றாள். இவளது போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். ஏனெனில் தர்மத்துக்காக நடைபெறும் போராட்டங்கள் இறுதியில் என்றுமே வெற்றியினைத் தான் அடைந்து விடுகின்றன என்பதுதான் வரலாறு நமக்குக் கூறும் பாடம்!

நந்திவர்மன்
மூலம்: இந்து
nantri - Pathivukal

Wednesday, January 28, 2004

மார்க்கிரெட் தாட்சர்

சேவல்கள் குரல் கொடுக்கலாம்... முட்டையிடுவது கோழிகள்தானே!

உலகம் முழுக்க இருக்கும் அத்தனை நாடுகளையுமே தங்களது வெண்கொற்றக் குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று நினைத்தவர்கள் பிரிட்டிஷார். அவர்களே பிரமிப்புடன் பார்த்து, மிகப் பெருமையுடன் தங்கள் தலைவி என்று ஏற்றுக்கொண்டது இந்தப் பெண்மணியைத்தான்!

அவர் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர். தொடர்ந்து பதினோரு வருடங்கள் பிரிட்டனின் பிரதமராக இருந்தார். அதற்கப்புறமும்கூட அவரே செய்த ராஜினாமாதான்!

தற்போது எழுபத்தெட்டு வயதாகிறது இவருக்கு. இன்னும்கூட பிரிட்டனில் இந்தப் பெண்மணிக்கு அசைக்க முடியாத புகழ் இருக்கிறது!

பெண்கள் மென்மையானவர்கள், பூப் போன்றவர்கள் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு தலைவியாக தாட்சரின் திடமான முடிவுகளையும், எந்த எதிர்ப்புக்கும் கலங்காத அவரது மன உறுதியையும் பார்த்து இவரல்லவா ‘இரும்புப் பெண்மணி!’ என்று ஒரு கம்பீர பட்டம் தந்து கௌரவித்தார்கள் மக்கள்.

அரசியலில் பெண்கள் சக்ஸஸ் ஃபுல்லாக வர விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று, இவர் நடவடிக்கைகளைப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டவர்கள் நிறையப்பேர்.

இவ்வளவு பெருமைக்குரிய இந்த பெண்மணியின் சுயசரிதையில் சுவாரஸ்யமான சம்பவங்கள் பல நிகழ்ந்திருக்கும் என்று நாம் எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போக வேண்டியிருக்கும்.

சமீபத்தில் வெளியான மார்க்ரெட் தாட்சரின் சுயசரிதைக்காக அவரை இண்டர்வியூ செய்த எழுத்தாளர், தாட்சரிடம் ‘‘மேடம்... இப்படியே இந்த சுயசரிதம் வெளிவந்தால் போரடிக்கும். உங்கள் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொஞ்சம் சொல்லுங்கள்..!’’ என்று கேட்டாராம்...!

அவ்வளவு தூரம் ஒளிவு மறைவு இல்லாத... பரபரப்பு இல்லாத ஒரு ‘ஸ்டிரெய்ட் ஃபார்வர்டு’ வாழ்க்கை முறை தாட்சருடையது!

தவிர தான் பெண் என்பதாலேயே தனக்கு முக்கியத்துவம் கொடுத்து, பத்திரிகைகள் தன் படங்களைப் போட்டு தன்னைப் பற்றி அதிகமாக எழுதுவதையும் அவர் விரும்பியதில்லை.

‘என் தகுதியும், திறமையும்மட்டும்தான் எனக்கு எந்தப் பதவியையும் பெற்றுத்தர வேண்டும்’ என்று பிடிவாதமாக இருந்தவர் அவர்!

இத்தனைக்கும் மார்கரெட்டின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. மார்கரெட்டின் அப்பா ஒரு மளிகைக் கடையில் வேலை செய்தவர். மிகமிக சாதாரண ஒரு குடும்பம்!

மார்கரெட், அவர் தங்கை முரியல் என்று இரண்டே பெண் குழந்தைகள்தான் அவர்களது பெற்றோருக்கு!...

அப்பா அம்மாவுக்கு மதத்திலும் கடவுள் காரியங்களிலும் தீவிர நம்பிக்கை என்பதால் இரண்டு பெண்களையுமே நடுத்தர வர்க்கத்துக்கே உரிய பயங்கர கண்டிப்புடன் வளர்த்தார்கள். உள்ளூர்ப் பள்ளிக்கூடத்திலேயே இருவரும் சேர்க்கப்பட்டார்கள். ‘இவள் அதிகநேரம் படிப்பதில்லையே... எப்படி பாஸ் செய்வாள்?’ என்று பெற்றோர் சந்தேகத்துடன் பார்க்கும்போதே மார்கரெட் வகுப்பில் முதல் மாணவியாக வந்து புருவத்தை உயர வைப்பாள். மார்கரெட்டின் இந்த சூட்டிகை தனம்தான் அவரை சம்பந்தமே இல்லாத அரசியல் துறையில்கூட பிரகாசிக்க வைத்தது!

ஒருதரம் ஒரு விஷயத்தைக் கேட்டால், அதை கூர்மையாக கவனத்தில் வைத்துக் கொள்ளும் மார்கரெட்டின் புத்திசாலித்தனமும், மற்றவர்களைத் தன் அறிவார்ந்த பேச்சால் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆற்றலும் இயல்பிலேயே இருந்ததால், மார்கரெட்டைச் சுற்றி எப்போதுமே ஒரு கும்பல் இருந்து கொண்டேயிருந்தது. ‘விளையும் பயிர் முளையிலே’ என்று சும்மாவா சொன்னார்கள்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்களின் கன்சர்வேடிவ் கூட்டமைப்பின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் டீன்_ஏஜ் மாணவியான மார்கரெட். இந்தப் பதவியை வகித்த முதல் பெண்ணும் இவர்தான்!

அப்போதுதான் பல புகழ்பெற்ற அரசியல்வாதிகளை இவர் சந்திக்க முடிந்தது. உடனே நாட்டின் பொதுத்தேர்தல் வேறு வந்துவிட, கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவாக சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொண்டார் மாணவி மார்கரெட். அரசியல் அவரை உடும்புபோல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

படிப்பு முடிந்தவுடனேயே பாராளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்று ஆசைப்பட்டார் மார்கரெட். அந்த வயதுக்கு அது சற்றே பேராசைதான் என்றாலும் அந்த இளம்பெண்ணின் சக்தியை உணர்ந்துகொண்ட கட்சி அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பை அளித்தது. ஆனால் மார்கரெட்டிற்கு அளிக்கப்பட்ட அந்தத் தொகுதியோ எதிர்கட்சியான லேபர் கட்சியின் கோட்டை! எதிர்பார்த்தது போலவே மார்கரெட் தோல்வியடைந்தார்.

ஆனால் நஷ்டத்திலும் சில லாபங்கள். ‘எம்.பி. தேர்தலுக்கு நின்ற மிகவும் இளவயதுக்காரர்’ என்ற பெயர் மார்கரெட்டுக்குக் கிடைத்தது. உழைப்பாளிகள் நிறைந்த அந்தத் தொகுதி அவருக்கு பல படிப்பினைகளைத் தந்தது. குறிப்பாக, தேர்தலில் போட்டியிட்டபோது அதிகமான வருமானவரியும் அரசின் குறுக்கீடுகளும் மக்களை எப்படி ஆட்டிப்படைக்கின்றன என்பதை நேரடியாகவே அறிந்து கொண்டார் மார்கரெட்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, தன் வருங்காலக் கணவர் டெனிஸ்தாட்சரை மார்கரெட் சந்தித்ததும் இந்தத் தொகுதியில் தான்..!

டெனிஸ் தாட்சர் இரண்டாம் உலகப்போரில் ஒரு மேஜராகப் பணிபுரிந்தவர். பர்மா காஸ்ட்ரால் என்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார். மார்கரெட்டின் ஆளுமை நிறைந்த அணுகுமுறை டெனிஸ் தாட்சருக்கு பிடித்திருந்தது. மார்கரெட்டுக்கு டெனிஸின் எளிமை பிடித்திருந்தது. இருவரும் மனம்விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள். மார்கரெட்டுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகனுக்கு மார்க் என்றும் மகளுக்கு கரோல் என்றும் பெயரிட்டார்கள்.

வீட்டில் குழந்தைகளை கவனித்தபடியே சட்டப்படிப்பு படித்தார் மார்கரெட். அதிலும் குறிப்பாக மக்களை அதிகம் பாதித்த ‘வரிகளை’ மனசில் வைத்துக் கொண்டு அதுபற்றி படித்தார். இதுவே இவரை இன்னும் பிரபலப்படுத்தி விட்டது!

இந்தச் சமயத்தில்தான் லண்டனுக்கு அருகே உள்ள, தொகுதியில் (அதே கன்ஸர்வேடிவ் கட்சியின் பிரதிநிதியாக) போட்டியிட மறுபடியும் சீட் கிடைத்தது மார்கரெட்டுக்கு.. முதல்முறை வெற்றி பெற்றார்! உடனே மார்கரெட்டை கல்வித்துறையின் செயலாளராகவும் நியமித்து கௌரவித்தார்கள்.

பதவி கிடைத்தவுடனே பிரிட்டனின் பொருளாதாரத்தை சரிசெய்ய பல நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் மார்கரெட் தாட்சர். ஆனால் அவற்றில் ஒரு நடவடிக்கை கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. நர்ஸரி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டுவந்த இலவச பால் திட்டத்தை இவர் ரத்து செய்துவிட, ‘‘மார்கரெட் தாட்சர், மில்க் ஸ்னாச்சர்!’’ என்றுகூட விமர்சிக்கப்பட்டார். தாட்சர் கவலைப்படவில்லை. ‘‘அவரவர் குழந்தைக்கு அவரவர் பால் வாங்கித் தந்து கொள்ள முடியும். ஆனால், நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருந்தால்தான் நாட்டில் அனைவருமே நன்றாக இருக்க முடியும்!’’ என்று உறுதியாகச் சொன்னார் தாட்சர்.

தொழிற்சங்கங்களோடு ஏற்பட்ட மோதல்களின் காரணமாக அப்போது பிரதமராக இருந்த ஹீத் தேர்தலில் தோல்வியடைய... உடனே மார்கரெட் தாட்சர், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் அவர் சோஷலிஸத்தை ஆதரிக்கவில்லை. ‘சோஷலிசத்துக்கு எதிர்ப்பாதையில் சென்றால்தான் பிரிட்டனை பொருளாதார அழிவுப்பாதையிலிருந்து மீட்கமுடியும்’ என்று தைரியமாகக் கூறினார்.

தான் சொன்னதை செயல்படுத்தவேண்டிய வாய்ப்பு அவருக்கு சீக்கிரமே வந்து சேர்ந்தது. அடுத்த பொதுத் தேர்தலில் ஜெயித்தவுடனே அவரையே பிரதமராக்கியது கன்சர்வேடிவ் கட்சி. பிரிட்டனின் முதல் பெண் பிரதமரானார் மார்கரெட்!

ஆனால் நாடு சோதனையில் இருந்த காலம் அது. இங்கிலாந்தில் மட்டுமே வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டி விட்டிருந்தது. அந்த சமயத்தில் அர்ஜென்டினா நாடு அவருக்கு ஒரு விதத்தில் உதவி (!) செய்தது.

அதாவது நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் எல்லைக்குள் இருந்து வந்த பாக்லாந்து தீவுகளை ஆக்கிரமித்து வந்தது. அர்ஜென்டினா. உடனே பிரிட்டனின் கடற்படையை அங்கு அனுப்பினார் மார்கரெட் தாட்சர். தோல்வி நிச்சயம் என்றும், போருக்கு பதிலாக மார்கரெட் தாட்சர் ராஜதந்திரத்துடன் சமாதானமாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்தின் பிரபல நாளிதழ்கள் எல்லாமே அலறின.

ஆனால், எதிர்பாராத திருப்பம்! ‘டக்’கென்று அர்ஜென்டினா அடிபணிந்து, பாக்லாந்து தீவுகளை காலி செய்தது! அப்புறமென்ன? பிரிட்டனின் ஒட்டுமொத்த மீடியாவின் ஆதரவும் மார்கரெட் தாட்சர் பக்கமே முழுசாகத் திரும்பிவிட்டது! அடுத்த பொதுத் தேர்தலிலும் அவரே பிரதமரானார்!

புகழ் வெளிச்சம் என்பது ஆபத்தையும் தேடித் தருவதுதான்! தாட்சருக்கும் அந்த ஆபத்து நிகழ்ந்தது. கட்சி மாநாடு நடக்கும்போது, குண்டு வெடித்ததில் மயிரிழையில் உயிர் தப்பினார் மார்கரெட். அருகே இருந்த ஐந்து முக்கிய பிரமுகர்களும் இந்த குண்டு வெடிப்பில் இறந்துபோனார்கள். குண்டு வைத்தது ஐரிஷ் தீவிரவாதிகள் என்பதும் விரைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.

தான் சொன்னது போலவே தாட்சர் பிரிட்டனின் பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் தாட்சரின் வெற்றி. ஆனாலும்கூட இவர்மீது மிகக் கடுமையான விமர்சனங்களும் எழவே செய்தன.

வருமானவரியைக் குறைத்தார் என்றாலும், ‘வாட்’ என்ற மறைமுக வரியின் விகிதத்தை அதிகப்படுத்தினார். இதனால், ‘பணக்காரர்களின் கைக்கூலி’ என்ற பட்டம் அவருக்குக் கிடைத்தது!

தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் குறைத்தார். நாட்டின் பொருளாதாரத்தை மனதில் கொண்டு பல சுரங்கங்களை இவர் மூட, தொழிலாளிகள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.

தவிர, அரசியல்வாதிகள் செய்யும் தேர்தல் செலவுக்கென ‘தேர்தல் வரி’யை இவர் அறிமுகப்படுத்த, அத்தனை கட்சிகளும் அலறின. இவரது கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே தாட்சர் மேல் கடும் கண்டனங்கள் எழுந்தது.

இதனால் அடுத்து நடைபெற்ற கட்சித்தேர்தலின் முதல் சுற்றில் கூட, மிகக் குறைவான ஓட்டு வித்தியாசத்தில்தான் மார்கரெட்டால் வெல்ல முடிந்தது. இரண்டாவது சுற்றில் தோல்விபெறும் வாய்ப்பு உண்டு என்பதை அறிந்துகொண்டதுமே மார்கரெட் தாட்சர் தானாகவே முன்வந்து தன் ராஜினாமாவை தந்துவிட்டார்.

‘‘கட்சியில் தீர்மானங்கள் எடுக்கும் இடத்தில் நான் இல்லை என்பதை நான் உணரவே எனக்குக் கொஞ்சகாலமானது. நான் பிரதமராக அமர்ந்திருந்த அந்த மக்கள் சபையில் தொடர்ந்து அமர எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் நிச்சயம் பிரதமராக மறுபிரவேசம் செய்வீர்கள் என்று பல நண்பர்களும் சொல்கிறார்கள். ஆனால், வாழ்க்கை என்பது அவ்வளவு எளிதானதல்ல... பதினொன்றரை வருடங்கள் இங்கே பிரதமராக அமர்ந்திருக்கிறேன். போதும்... ஒரு நாள் வழிவிட்டுத்தானே தீர வேண்டும்? தவிர, நான் இதே சபையில் இருந்தால் தற்போதைய பிரதமருக்கும் சங்கடமாக இருக்கிறது. எனவே மேலவைக்கு வந்துள்ள அழைப்பை நான் ஏற்று அங்கே போகிறேன்!’’ என்று தாட்சர் சொல்ல பலரும் நெகிழ்ந்து போனார்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் உடல்நிலை சற்று கெட, டாக்டர்களின் ஆலோசனைக்கேற்ப, அரசியல் வாழ்க்கையிலிருந்தே விலகிவிட்டார் மார்கரெட். சென்ற வருடம் அவர் அளித்த தொலைக்காட்சி பேட்டியில், தன் அரசியல் வாழ்க்கைக்கு தன் கணவர் எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதை மிக உணர்ச்சிகரமாக குறிப்பிட்டார் அந்த மனைவி. ஆனால், அப்படிப்பட்ட நல்ல துணையை அவரால் அவர் காலம் முழுக்க பெறமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே. இதயமாற்றுச் சிசிக்சைக்கு உள்ளான டெனிஸ் தாட்சர் சமீபத்தில் மரணமடைந்துவிட்டார்.

சமீபத்தில் மார்கரெட் தாட்சரின் சுயசரிதம் வெளியாகியிருக்கிறது. அதில் அரசியல் தவிர என்னென்ன பிடிக்கும் என்று சொல்லியிருக்கிறார் தாட்சர். நான் வீட்டில் தையல் வேலையை விரும்பி செய்வதுண்டு. துணிகளையும் ஒழுங்குபடுத்துவேன். மீந்துபோன உணவை வீணடிக்கமாட்டேன். அதை மாற்றி ஏதாவது புது அயிட்டம் செய்துவிடுவேன். சினிமா பார்க்கப் பிடிக்கும். பியானோ வாசித்ததுண்டு. சிறுவயதில் உள்ளூர் இசைவிழாக்களில் பரிசுகள்கூட பெற்றதுண்டு. அப்பாவை அதிகம் பிடிக்கும்!’’

மார்கரெட்டின் அரசியல் வாழ்வில் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் குறைச்சலே தவிர, சுவாரஸ்யமான பேச்சுகளுக்கு குறைவு இல்லை! இதோ ‘நச் நச்’ என்ற அவரது பேச்சுக்களில் சில..

‘‘தேம்ஸ் நதியின் மீது நான் நடந்தால் கூட விமர்சகர்கள், ‘மார்கரெட்டுக்கு நீந்தத் தெரியாததால் நடக்கிறாள்’’ என்பார்கள்..’

‘‘பெரிய பொய்களை சொல்லக்கூடாதுதான். ஆனால், தெளிவில்லாத பதில்களைக் கூறலாமே!’’

‘‘நேற்று ‘மம்மி ரிடர்ன்ஸ்’ என்ற சினிமா போஸ்டரைப் பார்த்தேன். இன்னமும் நான் தேவை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்றே இதைக் கருதுகிறேன்...’’

‘‘சேவல்கள் குரல் கொடுக்கலாம்... ஆனால் முட்டையிடுவது கோழிகள்தானே!’’

nantri-Kumudam